Friday, October 19, 2012

பாட்டி...


அற்புதமான சில மனுஷிகள் சமயங்களில் சமையல் கூடங்களோடு முடங்கிவிடுகிறார்கள். சமயங்களில் அதுவே அவர்களது விருப்பமாகவும் இருக்கிறது.. நான் பிறந்த்திலிருந்து ஏழு வருடங்கள் வரை சந்தித்த மிக மிக அற்புதமான மனுஷி, என் பாட்டி.
என் அம்மாவையும் சேர்த்து எங்கள் பாட்டிக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள். நான்கு மகன்கள் மூன்று மகள்கள். இத்தனை பெரிய குடும்பத்தில் என் அம்மா ஆறாவது குழந்தை. அம்மாவுக்கு 10 வயது இருக்கும் போதே தாத்தா இறந்துவிட்டாராம். What makes my paati extraordinary? In 1950s and 60s, she was a single woman who brought up all her seven children under trying circumstances and made them what they are today. Of course, தாத்தா கொஞ்சம் சொத்துகள் விட்டு போயிருந்தார். ஆனால் அவர் விற்ற, தானமாக கொடுத்த சொத்துகள் பற்றி கேட்டால் மலைப்பாக இருக்கும். பெரம்பூரில் பாதி தாத்தாவுடையது என்று இப்போதும் எங்கள் வீட்டில் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தவிர, தாத்தா விட்டுச் சென்ற சொத்துகள் மீது ஏகப்பட்ட கடன்கள் வேறு. தாத்தா இறந்த போது அவரது ஈம சடங்குகளுக்குகூட பணம் இல்லாத நிலை. பாட்டி என்ன நிலையில் இருந்திருப்பார், எப்படி சமாளித்திருப்பார் என்று நினைத்தால் இப்போதும் மலைப்பாக இருக்கிறது. சில வருடங்களிலேயே பாட்டியின் முதல் மகன் – என் மாமா – தலையெடுத்துவிட்டார். அந்த சில வருடங்கள் பற்றி என் அம்மா தலைமுறையில் யாருக்கும் நினைவு இருப்பதாக தெரியவில்லை. முதல் மாமா மட்டும் எப்போதாவது சொல்வார்: மீண்டும் இதே பெரம்பூரில் குடும்பம் இழந்த நல்ல பேரை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்போது நிறைவேறிவிட்டது. மாமா தலையெடுத்த பிறகு தங்கைகளுக்கு திருமணம், தம்பிகளின் படிப்பு, வேலை எல்லாம் வேகவேகமாக நடந்தன. இப்போது எல்லோருமே நல்ல நிலையில் இருக்கிறார்கள். குடும்பத்தில் பாதி பேருக்கு ஐ.டி நிறுவனங்களில் வேலை. ஒரு சிலர் அமெரிக்கா மற்றும் லண்டனில். எனக்கு நினைவு தெரிந்து மரங்கள் சூழ சாதாரண ஓட்டுவீட்டில் வசித்து வந்த பாட்டி, 1985ல் இறக்கும் போது கான்கிரீட் வனங்களுக்கு இடையில் ஒரு வசதியான வீட்டில்தான் இருந்தார். பாட்டி அவரது கணவரின் பாட்டியிடம் மிகவும் கொடுமைகள் அனுபவித்ததாக அம்மா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். தாத்தாவுக்கு அப்பா அம்மா இல்லையாம். எடுத்து வளர்த்ததெல்லாம் அவரது பாட்டி அமிர்தவல்லிதான். ஒருவித பொஸ்ஸஸிவ்னெஸ் காரணமாக என் பாட்டியை தாத்தாவுடன் நெருங்கி பழகுவதை விரும்பாமல் இருக்கலாம். அமிர்தவல்லி பாட்டி பற்றி ஒரு தனி டைரியே போடலாம். அத்தனை கதைகள் உண்டு. சாம்பிளுக்கு ஒன்று: அமிர்தவல்லி பாட்டிக்கு பணம் என்றால் கொள்ளை உயிர். உயிர் என்று சொல்லும் போது உயிரைதான் சொல்கிறேன். அமிர்தவல்லி பாட்டி சாகும் தறுவாயில் இருந்தபோது உயிர் பிரிய மிகவும் அவதிப்பட்டாராம். பேச முடியாமல், தரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர் நிலைகுத்தி பார்த்தபடி இருக்க, அந்த இடத்தை தோண்டிப் பார்த்தால் புதைக்கப்பட்ட சில்லறை காசுகள். டாக்டரின் அறிவுரைப்படி காசை அரைத்து வாயில் ஊற்றிய பிறகே அவர் உயிர் பிரிந்ததாக எங்கள் வீட்டில் சொல்வார்கள். எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அமிர்தவல்லி பாட்டியின் பெரும் புதையல் ஒன்று இப்போதும் பெரம்பூரில் ஏதோ ஒரு மூலையில் இருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு! ஆனால் மிகவும் கஷ்டப்பட்ட காலத்தில்கூட அந்த புதையலை நம்பாமல் தனது பிள்ளைகள் தங்களை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று என் பாட்டி நினைத்ததுதான் made her extraordinary. பாட்டி இறந்த போது எனக்கு வயது ஏழு. ஏழே வருடங்களில் பாட்டி எனக்கு காட்டிய உலகங்கள் ஏராளம். பாட்டியின் சுட்டுவிரலை பிடித்துக் கொண்டு ice cream வாங்க, மருந்து கடைக்கும் போன நேரங்கள் மறக்க முடியாத விஷயங்கள். என் அம்மாவுடன் பிறந்தவர்கள் ஆறு பேர் என்பதால் பெரம்பூர் எப்போதும் கலகலப்பாக இருக்கும் (இருந்த இடத்தில் நான்கு மாமாக்களும் தனிதனியாக வீடு கட்டிக் கொண்டுவிட்டார்கள். ஆனால் ஒரே காம்பவுண்டு சுவர்தான்). எங்கள் குடும்பத்தில் இருந்த மற்ற குழந்தைகளை ஒப்பிடும் போது ஏழு வயதில் நான் கொஞ்சம் அழகும் நிறமும் கம்மி. இப்போது நினைத்து பார்த்தால் அபத்தமாக இருந்தாலும் அப்போது ஒரு inferiority complex இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. ரொம்பவே reservedஆக இருப்பேன். பாட்டிதான் என் self confidence. பாட்டிக்கு நான் என்ன செய்தாலும் அழகு. வலிப்பு வந்த மாதிரி கையை காலை ஆட்டினாலும் பாட்டி நல்ல டான்ஸ் என்பார். பாட்டி இறக்கும் வரை நான் எந்த குட்டி லீவ் கிடைத்தாலும் பெரம்பூருக்கு ஓடிவிடுவேன். பாட்டியின் அருகில் படுத்துக் கொண்டு காலை அவர் மீது போட்டு தூங்கியது போல ஒரு நிம்மதியான தூக்கத்தை இன்று வரை தூங்கியதில்லை. பாட்டி இறந்தபோது என் உலகம் இருண்டது. என் தன்னம்பிக்கை சிதறியது. அப்போதுதான் பாட்டியின் போர்வையை போர்த்திக் கொண்டு தூங்கும் பழக்கம் ஏற்பட்டது. பாட்டி போர்வை இல்லாத காரணத்தால் தூங்காமல் தவித்த நாட்கள் உண்டு. பாட்டிக்கு பிறகு தன்னம்பிக்கை தந்து கொண்டிருந்த பாட்டியின் போர்வை ஒரு கட்டத்தில் ஒரு compulsive disorderஆக ஆன போது எதாவது மன நோய் வந்து விடுமோ என்று பயந்து ஒருசில வருடங்களுக்கு முன்பு அந்த பழக்கத்திலிருந்து கஷ்டப்பட்டு விடுபட்டேன். பாட்டியும் அதைதான் விரும்பியிருப்பார் என்று தோன்றுகிறது. பாட்டி இறந்த பிறகு என்னிடம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்ட எனது reservedness and inferiority complexலிருந்து விடுபட எனது வேலை மிகவும் உதவியது. இப்போது பெரம்பூரில் எனது மாமாக்கள் வசிக்கும் இடம் மிகவும் பிரம்மாண்டமானது என்றுதான் சொல்ல வேண்டும். அடுக்குமாடி தளங்களின் மீது மிக பிரம்மாண்டமாய் நிற்கிறது என் பாட்டியின் பெயர் தாங்கிய பலகை. என்னவோ தெரியவில்லை. பாட்டி இருந்த ஓட்டுவீட்டில் கிடைத்த கதகதப்பு இந்த அடுக்கு மாடிகளில் கிடைக்கவில்லை.

No comments: